பதில் சொல்வதை விட கேள்வி கேட்பதற்கும் திறமை வேண்டும். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க கற்றுக் கொடுக்க தேவையில்லை. ஏனெனில் மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருக்கிறது. கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் வளர வளர கேள்வி கேட்பதை விட்டு விடுகிறோம். இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால் சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கேள்வி கேட்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்திசாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது.
கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான். வகுப்பறை, அலுவலகம், பொது இடங்களில் கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
ஆனால் சிலர் மட்டுமே, சரியாகவும், துல்லியமாகவும் கேள்வி கேட்கின்றனர். எனவே கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொண்டால், பல வழிகளிலும் நமக்கு உதவும்.