Thursday, December 31, 2015

சவால்களுக்குச் சவால்விடு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது’! என்றார் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம்; இன்னொன்று புறப்போராட்டம்.

அகப்போராட்டம் என்பது நமது ஆக்க சிந்தனைகளுக்கும், எதிர்மறை சிந்தனைகளுக்கும் இடையே நொடிகள் தோறும் நடைப்பெறும் போராட்டத்தை குறிக்கும். அதிகாலை எழுந்து உழை; அகிலம் உனக்கு! என்று சிந்தனை நம்மை எழுப்ப முயலும் போது, ‘எல்லாம் விதிபோல்தான் நடக்கும், படுத்து உறங்கு!‘ என்று எதிர்மறை எண்ணம் இழுத்து மூடும்!
இதுபோலத்தான், ஒவ்வொன்றும் நிகழ்கிறது. அதாவது ‘முயற்சி செய்! முடியாது உலகில் இல்லை’! என்று ஆக்க எண்ணங்கள் உத்வேக சிறகுகளைக் கொடுக்கும்போது, எதிர்மறை எண்ணம் வேண்டாம். ‘சும்மா இருப்பதே சுகம்’ என்று சோம்பல் விளங்குகளை எடுத்து நமது கைகளில் மாட்டும். ‘மதித்து நட, உயர்வுக்கு உழைப்பு மட்டும் போதாது, மற்றவர்கள் ஒத்துழைப்பும் வேண்டும்! பணிவுதான் உன்னை உயர வைக்கும்‘ என்று ஆக்க சிந்தனை அறிவுறுத்தும் போது; ‘நீ தான் சிறந்தவன் மற்றவன் எல்லாம் மடையன்’ என்று அகந்தை நெருப்பை பற்ற வைத்து தலையில் கனத்தை ஏற்றும்! எதிர்மறை எண்ணம்.
ஆகவே, அகப்போராட்டத்தில் ஆக்க சிந்தனைகளை மட்டுமே வெல்ல வைக்கும் வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகப்போராட்டத்தில் வெற்றி பெற்றால், வெளியில் எதிர்வரும் எந்த சவாலுக்கும் சவால்விட்டு வெற்றி வாகை சூட்ட முடியும்.
அகப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு சில யோசனைகள்:
1. உங்களால் முடியும் என்று முதலில் நம்புங்கள். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கை.
2. ஒவ்வொரு வேலையையும் ஒத்திப் போடாமல், சாக்குப் போக்குச் சொல்லாமல் உடனுக்குடன் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை. காரியங்களைச் செய்பவர்கள் காரணங்களை சொல்வதில்லை.
3. செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பதுடன், அவற்றை முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டி ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! ஏனென்றால், சுயஊக்குவிப்பே  சிறந்த பாராட்டு.
4.மனம் தளர்கின்றபோது, இதுவரையில் நீங்கள் பெற்ற வெற்றிகளை அசைப்போடுங்கள். வெற்றுமனமாக இருப்பதைவிட வெற்றி மனத்தோடு இருப்பதே சிறந்தது.
5. உங்கள் முயற்சிச் சிறகுகளை வெட்டி வீழ்த்தும் முட்டாள்களிடமிருந்து விலகியே இருங்கள்.
6. வெற்றி என்பது எனது பிறப்புரிமை என்று மனதுக்குள்ளாக முழங்கிக் கொண்டே சவால்களுக்குச் சவால் விடுங்கள்.
-டாக்டர் கவிதாசன்.

No comments:

Post a Comment